பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, July 1, 2021

இராசபாளையம் சுதந்திரச் சிந்தனையின் 34 ஆவது நிகழ்வு - கவிஞர் அபி உரை


இராசபாளையம் சுதந்திரச் சிந்தனையின் 34 ஆவது நிகழ்வு 28.03.2021 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுதந்திரச் சிந்தனையின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.நரேந்திரகுமார், வேலாயுதம் பொன்னுச்சாமி, தம்பி அருண் ஆகியோர் அபியின் கவிதைகள் குறித்து ஆழமான உரையாற்றினர். அதன் பின்னர் கவிஞர் அபி உரையாற்றினார். பின்னர் தனது கலந்துரையாடலும், தனது கவிதைக்கு தானே விளக்கம் அளிக்கவும் செய்தார்.


கவிஞர் அபி உரை

           நீங்கள் அனைவரும் குழந்தைப் பருவத்தில் கவிஞர்களாக இருந்தீர்கள். குழந்தைகளின் உலகம் மாசுமருவற்ற கவிதைகள் நிரம்பிய உலகம். அந்தக் குழந்தைகளுடைய பாவணைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் வீட்டிற்குள்ளேயே ஒரு சின்ன உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் வெளியிலே அளைந்து திரிந்துவிட்டு களைப்போடு வீடுதிரும்பினேன். என் பேத்தி மூன்று வயதிற்கு உட்பட்டவள். வேகமாக வந்து அப்பா (தாத்தா) என்று கையை நீட்டினால். அடடா சாக்லேட் வாங்க மறந்துபோச்சே. என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அப்போது அபி ஆகிவிட்டேன். என்னுடைய சட்டைப் பைக்குள் கையை விட்டு வெளியே எடுத்து அவளது கையில் வைத்தேன். ஒரு வினாடியில் அவளது முகம் மாறிவிட்டது. தன் கையை மூடிக்கொண்டாள். மீண்டும் கையை விரித்து சாக்லேட்டை உரித்துக்கொடுங்கள் என்று கையை நீட்டினால். நானும் அவளது பாவணைக்கு மதிப்புக் கொடுத்து உரித்து, இரண்டையும் தனித்தனியாகக் கொடுத்தேன். மிட்டாயை ஒருகையில் வாங்கிவிட்டு, ஞாபகமாகத் தாளைக் கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டு வந்தாள். மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டாள். அதோடு கதை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாள். எவ்வளவு கிண்டல் பாருங்கள். இந்தக் குழந்தையைவிட வேறு கவிதை என்ன இருக்கிறது. குழந்தையிடத்திலே கவிதை இல்லை என்று சொல்லமுடியுமா? குழந்தைகளிடத்துள்ள பாவணை மிகப் பெரியது. பாவணை என்பதே மிகப் பெரிய விசயம். பாரதி புதுச்சேரியில் குள்ளச்சாமி என்ற ஒரு சித்தரைப் பார்த்தார். அந்தக் குள்ளச்சாமி பிச்சைக்காரன்தான். தெருவில் திரிகின்றவன். அழுக்கு மூட்டைகளை சுமந்துகொண்டு திரிபவன். ஒரு முறை அவனைப் பார்த்து உன்னை சித்தன் எங்கிறார்கள்; பெரியவன் என்கிறார்கள்பாவணையால் பரவெளிக்கு மேலே தொட்டவன் என்கிறார்கள்இப்படிக் குப்பைக் கூழங்களையெல்லாம் சுமந்துகொண்டு திரிகிறாயே என்று கேட்டபோது, அவன் எளிமையாகப் பதில் சொன்னான். பாரதிக்கு மண்டையில் அடிக்கிறதுபோல். நான் குப்பைகளை வெளியில் சுமக்கிறேன். நீ உள்ளே சுமக்கிறாய் என்று. அந்தக் குள்ளச்சாமி பாவணையால் பரவெளிக்குமேலே தொட்டவர் என்கிறார் பாரதியார். பாவணை என்றால் என்ன? பாவணை என்பது நான் இன்னொன்றாகப் பாவித்துக்கொள்ளுதல் அல்ல. நான் உங்களில் ஒருவனாகப் பாவித்துக்கொள்ளுதல். வெளியில் இருப்பவராகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு கடலாகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு மலையாகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு தூசியாகப் பாவித்துக்கொள்ளுதல். இது அல்ல பாவணை. எல்லாப் பொருளையும் தன் சொந்த அனுபவத்திற்குள் கொண்டுவந்து, அந்த அனுபவத்தில் அந்தந்தப் பொருள்களுக்குரிய இடத்தில் அதை அமைத்துப்பார்ப்பதுதான் பாவணை. பாவணைக்கு நீங்கள் வெளியே போகவேண்டியது இல்லை. குழந்தைகள் வெளியே போனது இல்லை. பாவணைகளைத் தங்களுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘குட்டி இளவரசன்என்றொரு குறுநாவல். அது ஒரு /பிரென்ச் நாவல். சிபிராம் மொழிபெயர்ப்பில் வந்தது. நான் ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்துவிட்டு, அதை என்மாணவர்களுக்கு அதைக் கட்டாயம் படிக்கவேண்டும். அதைப் பற்றிய கருத்தினைக் கூற வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தேன். அது ஒரு பாலைவனம் அந்தப் பாலைவனத்தில் தனி விமானி தன்னுடைய விமானத்தைத் தனியே இயக்கி, தனியாக வந்திருக்கிறான். அது எஞ்சின் கோளாறு காரணமாக தரையிறக்கிவிட்டான். ஒரு ஏழெட்டு நாட்களுக்கு அவருக்கு நீரும் உணவும் இருக்கிறது. அதற்குள் அவர் அதை சரிசெய்ய வேண்டும். மும்முரமாக அதை சரிசெய்துகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தொட்டது போல் தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் சின்னஞ் சிறுவன். அவனது தோற்றம், உடை அமைப்பைப் பார்த்தால் அது ஒரு இளவரசனின் தோற்றம். அவன்தான் குட்டி இளவரசன். அவன் எங்கிருந்து வாந்தான், எப்படி அங்கு இருந்தான் என்பதெல்லாம் நாவலில் வரவில்லை. வரவேண்டியதும் இல்லை. நாவலின் தளமே வேறு. அது பாலைவனம். நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டபோது நான் பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் இருக்கிறேன் என்கிறான் அந்தப் பையன். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை வளர்கிறது. ஒரு நாள் கேட்கிறான். எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி ஓவியம் வரைந்து கொடுக்க வேண்டும் என்று விமானியிடம் கேட்கிறான். விமானி வேலையோடு வேலையாக ஒரு தாளில் ஒரு ஆட்டுக்குட்டியின் படத்தை வரைந்து கொடுக்கிறார். அவன் வாங்கிப் பார்த்துவிட்டு இது என்னுடைய ஆடு இல்லை என்கிறான். திரும்பவும் வேறு ஒன்று வரைந்து கொடுக்கிறார். அதுவும் என்னுடைய ஆடு இல்லை என்கிறான். நான்கைந்து படங்கள் ஆகிவிட்டது. அந்தப் படங்களையெல்லாம் நாவலில் போட்டுக்காட்டியிருப்பார்கள். அதற்குப் பின் என்னசெய்வதென்று விமானிக்குத் தெரியவில்லை. இறுதியாக அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. கடைசியாக ஒரு படம் வரைந்து கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவுடன் குட்டி இளவரசன் குதித்தான். ஆஹா நான் என்னுடைய ஆட்டைப் பார்த்துவிட்டேன். படத்தில் என்ன இருக்கிறது என்றால் ஒரு தகரப் பெட்டி. மூடி போட்டு முடப்பட்டிருக்கின்றது. அதில் எப்படி ஆடு. அவன் கண்டுகொண்டான். விமானி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் அவன் கண்டுகொண்டான். இதற்குள்தான் என்னுடைய ஆடு இருக்கிறது என்று கண்டுகொண்டான். அது என்ன குழந்தையா? இல்லை, அது கவிதை. அது கவித்துவம். தன்னுடைய ஆடு வெளியில் இருக்கின்ற எந்த ஆட்டையும்போல் இல்லாமல் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் ஆடு நல்ல எனக்குரிய ஆடு என்று கற்பனை செய்துகொள்கிறான். அது கற்பனையே அல்ல. அதுதான் பாவணை. அதோடு இன்னொன்றும் சொல்கிறான் நல்லவேளை பெட்டிக்குள் வைத்திருக்கிறீர்கள். வெளியில் விட்டால் நான் வளர்த்திருக்கிற இந்தப் பூசசெடிகளைத் தின்றுவிடும் என்றுவேறு சொல்கிறான். இதேபோல்தான் குழந்தைகள் சின்ன வயதிலேயே கவித்துவத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றன. போர்ஹே என்ற பெரிய எழுத்தாளரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிகச் சிறந்த எழுத்தாளர். அவருடைய வாழ்க்கையையும் படைப்பையும் பற்றி எஸ். இராமகிஷ்ணன் ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் போர்ஹேயின் சிறு வயது அனுபவம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். போர்ஹே சிறுவனாக இருந்த போது அவனது சிறிய அறையில் பேச்சுக் குரல்கள் பெற்றோர்களுக்குக் கேட்டுள்ளது. பெற்றோர்கள் அவனை மிகச் சுதந்திரமாக விட்டுள்ளார்கள். அவன் வெளியே வந்தபிறகு அவனிடம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாயே யார் அது? என்று கேட்டார்கள். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் என்று சொன்னான். சிறிது நாட்கள் சென்ற பின்பு அந்தப் பேச்சுக்கள் நின்று விட்டது. அப்பொழுது அந்தப் பெற்றோர்கள் கேட்டார்கள். என்ன உன்னுடைய நண்பர்களின் பேச்சுக்கள் கேட்கவில்லையே ஏன் என்று. அதற்கு அவன் என் நண்பர்களை எனக்குப் பிடிக்கவில்லை. போகச்சொல்லிவிட்டேன் என்றான். உண்மையில் நடந்தது என்னவென்றால் அங்கு யாருமே வரவில்லை. நண்பர்கள் வந்ததாகவும் அவர்கள் போய்விட்டதாகவும் போர்ஹேவின் பாவணை அவனைச் சொல்லத் தூண்டியிருக்கின்றது. இந்தக் கவிதையை ரசித்து, அவனது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவனது கற்பனையின் வழியே அனுமதித்தார்கள். சிக்மண்ட் பிராய்டு படைப்பும் படைப்பாளிகளையும் பற்றிச் சொல்லும்போது ‘‘குழந்தை விளையாட்டு இருக்கிறதே அது படைப்புச் செயல். குழந்தையும் கவிஞனும் வேறுவேறு இல்லை’’ என்று சொல்லுவார். என்னுடைய படைப்பு அனுபவம், என்னுடைய கவிதை அனுபவம் இவற்றையெல்லாம் இந்த அடிப்படையில்தான் பரிசீலித்துப் பார்த்தேன். என்னுடைய வீட்டு நடுவிலே பெரிய முற்றம். அங்கே ஒரு மரக்கட்டில் இருக்கும். மாலை நேரங்களில் இரவு நேரங்களில் மள்ளாக்கப் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களைப் பார்ப்பேன். அந்தச் சின்ன வயதில் அந்த நட்சத்திரங்கள் எல்லாம் எனக்குச் சொந்தம் என்ற உணர்வு இருக்கும். வீட்டிற்கு வெளியே போனால் அவையெல்லாம் வேறு யாருடையதோ. என்னுடைய வானம் பார்க்கின்ற பகுதியில் இருக்கின்ற எல்லா நட்சத்திரங்களும் என்னுடைய நட்சத்திரங்கள். எல்லா இரவு நேரங்களிலும் என்னுடைய தாய் நான்கைந்து குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு கதைகள் சொல்லுவார்கள். அதில் எத்தனையோ விநோதங்கள் வந்திருக்கின்றன. அந்தக் கதைகளெல்லாம் எனக்கு உண்மைகள். எதுவும் கற்பனை இல்லை, எதுவும் வித்தியாசம் இல்லை, எதுவும் விநோதம் இல்லை. அந்த சிறுவனுக்கு அனைத்தும் உண்மைகள். இந்தவிதமான கதைகளின் மூலமாகவே அவன் கதைகளுக்குள்ளே நுழைந்து தான் என்பது இல்லாமல் ஒரு தனிமை என்று ஆகிவிட்டான். ஒரு தனிமை வடிவம் அவனுக்குக் கிடைத்துவிட்டது. அந்தத் தனிமையின் இறுகளில் ஏதோ ஒரு கவித்துவத்தின் விரல் நுனி அவன் மீது பட்டிருக்க வேண்டும். இதை நான் உறுதியாகச் சொல்லவில்லை. ஒரு யுகமாகவே சொல்லுகிறேன். இப்படித் தான் நடந்தது என்று சொல்லவில்லை. இப்படி இருந்திருக்க வேண்டும். அதற்குப் பின்னார்தான் என்னுடை அந்தச் சிறுவன் அந்தப் பருவத்திலேயே கவிதையினால் தொடப்படுகின்ற பேறுபெற்றவனாக இருந்திருக்கின்றான் என்று நான் பின்னாளில் உணர்ந்திருக்கிறேன். அன்று முதல் இன்று வரை என்னுடைய பாதையில் நான் பயணம் செய்கின்ற எல்லா இடங்களிலும் ஒரு இணைகோட்டில் அவனை நடத்திக்கொண்டு வந்திருக்கின்றேன். இப்பொழுதுகூட அவன் இங்கு எங்கேயோதான் இருக்க வேண்டும். இந்தச் சிறுவனுடைய மாசுமறுவற்ற மனத்தூய்மையை மிகுந்த சிரமப்பட்டு பாதுகாத்துக்கொண்டிருக்கின்றேன். அவனுடைய முக்கியமான எதிரி யார் என்று கேட்டால் என்னுடைய அறிவு தான். என்னுடைய அறிவைக் கொண்டு அவனை மாசுபடுத்தாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அப்துல்ரகுமான் ஒரு கவிதை சொன்னான். ‘‘புத்தகங்களே /சமர்த்தாய் இருங்கள் / குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’. குழந்தைகளைக் கிழித்துவிடுவது எது. அவர்கள் வளர்ந்தபின் வரும் அறிவும் ஆற்றலும். ஆனால் குழந்தைமையைக் கொன்றுவிடாமல் இணைகோட்டிலேயே அருகிலேயே கொண்டுவருபவனுக்கு இறுதிவரைக் கவிதைகளைத் தந்துகொண்டே இருக்கும். அந்தச் சின்னப் பருவத்தில் அவனுக்குள் இருந்த நிழலாட்டங்கள், இனம் புரியாத நடமாட்டங்கள் ஏதோ காரணமரியாத ஒரு துக்கம் எல்லாம் அப்படியே பின்னால் வந்தபோது எனக்குக் கவிதைகளாகக் கூடும் என்பது தெரிந்தது. அப்படி வந்தவைகளைத் தான் பின்னாளில் கவிதை ஆக்கினேன். அவன் பார்த்திருந்த தினமும் வாசல் படியில் இருந்து பார்த்தால் எதிரே பெரிய மலை இருக்கின்றது. என்னுடைய ஊர் போடிநாயக்கனூர். அந்த மலை அவனுக்குச் சொந்தமான மலை. மாலை வந்தபிறகு இருள் கவியத் தொடங்கிய பிறகு அந்த மலையோடு பேச்சு இருப்பதுபோல் தோன்றும். அந்தப் பேச்சுக்குச் சற்று மாற்றி கவிதைக்கு வேறுவிதமாக மாற்றிக்கொண்டேன். இங்க இருக்கும் இருளை சிறிது சுண்டினால்கூட என்னுடைய மலை எனக்கு பதில் சைகை தரும் என மாற்றிக்கொண்டேன். எனக்குப் ஒரு பதில் சைகை வருகிறது. அந்தப் பையன் நடந்து திரிந்த காட்டுப்பக்கமான ஒற்றையடிப் பாதை இரண்டு பக்கமும் புல் அடர்ந்திருக்கும். அந்தப் குழந்தை என்னிடம் அதை மீண்டும் காட்டும்போது அடடா இந்தப் பாதைப் புரண்டு படுக்க இடமில்லாமல் சலித்துக்கொண்டிருக்கின்றது. பரிதாபமாக இருக்கின்றதே. நான் ஏழாவது படிக்கின்றபோது ஆற்றில் இரங்கி குளித்திருக்கின்றேன். அப்பொழுது நடு ஆற்றில் தெளிந்த நீரில் அடியில் தெரியும் வண்டல் மண்ணை அள்ளிப் பிசைந்திருக்கின்றேன். இப்பொழுது தெரிகின்றது அப்படி நான் பிசைந்தபோது அந்தப் பிசைவில் மாலையின் துடிப்பைக் கணித்திருக்கிறேன். அந்தக் கவிதை எனக்கு இப்பொழுது வருகின்றது.





            தாஸ்தவஸ்கியின் சிறுகதையில் வருகின்ற கதாநாயகன் உலாவப் போகிறான். ஒரு குறிப்பிட்டத் தெருவழியாகத் தினமும் உலாவப் போகிறான். அந்தத் தெருவில் இருக்கின்ற வீடுகள் எல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டன. அந்தத் தெருவில் அவன நுழைகின்ற போது அந்தத் தெருவில் இருக்கின்ற வீடுகள் எல்லாம் ஒரு அடி முன்னால் வந்து அவனை வரவேற்கின்றன. ஒரு வீடு சொல்கின்றது. இப்பொழுதுதான் வருகிறாய? வாவாஎன்ன செய்தி என்று கேட்கின்றது. அடுத்த வீடு சொல்கிறது அடுத்த வீடு சொல்கிறது உனக்குத் தெரியுமா? எனக்கு மே மாதத்தில் எனக்கு இன்னொரு மாடி கட்டப்போகிறார்கள் என்று. அடுத்த வீடு கொஞ்சம் நோஞ்சான் வீடு போல. நாளை என்னைப் பழுதுபார்க்கப் போகிறார்கள். இன்னொரு வீடு சொல்கிறது. நீங்கள் நான்கைந்து நாள் வரவில்லையா? நான் தீப்பிடித்து எரிந்துபோகப் பார்த்தேன். அஞ்சி நடுநடுங்கிவிட்டேன். இதை யார் சொல்கிறது என்றால் தாஸ்தவஸ்கியின் கதையில் வருகின்ற ஒரு பாத்திரம் சொல்கின்றது. அப்பொழுது தாஸ்தவஸ்கியும் தனது குழந்தைப் பருவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருகிறான். அந்தப் பருவம் இல்லாமல் எவனும் கவிஞனாக, எழுத்தாளனாக முடியாது. அந்தப் பருவம் இருந்துகொண்டிருக்கின்றது.

            நாம் எல்லாரும் பிம்பங்கள் கொண்டவர்கள்தான். இங்கிருக்கின்றவர்கள் நாம் நமது வடிவத்தில் இருக்கின்றோம். நான் இங்கிருந்து போன பின்பு இந்த நாற்காலிகள் காலியாக இல்லை. உங்களது பிம்பங்களைக் கொண்ட நாற்காலிகளாக இருக்கும். அதற்கு மேல் யாரும் உட்காரலாம், கழுவலாம். ஆனால் அந்தப் பிம்பங்கள் அங்கு இருக்கும். எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் நமது பிம்பங்களை விட்டுவிடாமல் போனதே இல்லை. இது எனக்கு அழுத்தமான நம்பிக்கை. இப்பொழுது எனது ஊருக்குப்போனால், இப்பொழுது 1968க்குப் போனால் நான் எங்கெல்லாம் இருந்தேனோ அங்கெல்லாம் என்னுடைய பிம்பங்கள் இருக்கின்றன. அநேகமாக எதையும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கும்போது அதை நெகிழ்ச்சியாகப் பார்க்கமாட்டீர்கள். காட்சியாகத்தான் பார்ப்பீர்கள். 10 வருடத்திற்கு முன் நடந்ததை நினைத்துப் பார்க்கின்றபோது உங்கள் மனதில் காட்சிதான் ஓடும். அந்தக் காட்சியில் நான் எப்படி இருந்தேன், என்ன உடை அணிந்திருந்தேன் என்று என்னைப் பற்றிய பிம்பங்கள் வரும். இந்தப் பிம்பங்களின் பெருங்கம் அளவுகடந்து செல்கின்றது. அதைக் கணக்கிடவே முடியாது. நான் ஒருவன் அல்ல பல. எல்லாம் நான். எல்லாவற்றிலும் நான் இருக்கின்றேன். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்று வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லியதை நான் இப்பொழுது எனக்கு ஆதரவாக எடுத்துக்கொள்கின்றேன். இந்த நான்களில் சில சமயங்களில் நிகழ்காத்து நான் அது இந்தக் கூட்டத்தில் எங்காவது தவறிப்போய்விடும். அது பிம்பங்களின் நானைவிட்டுத் தவறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் என்னை இழந்துவிட்டேன்; என்னைத் துறந்துவிட்டேன்; நான் இல்லாமல் ஆகிவிட்டேன். என் கவிதையின் பெரும்பகுதியில் நான் திரும்பத் திரும்பச் சொல்லுவது, இருத்தலும் இல்லாது இருத்தலும் என்பது. நான் இருக்கும் போது இல்லாது ஆகிட்டேன். ரூமி சொன்னார் ‘‘மரணமடைவதற்கு முன்னலேயே மரணமடையுங்கள்’’ என்றார். அந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கின்ற வெளிச்சமும் பேரின்பமும் வேறு எதற்கும் கிடைக்காது. அப்படிச் சில தருணங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும். அந்தத் தருணங்களை என் கவிதையின் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். அது அந்தத் தருணங்களை மேய்ந்து தன்னை நன்றாக வரைந்துகொள்கின்றது. அப்படி என் கவிதை அந்தத் தருணங்களை வரைந்துகொண்டிருக்கும்போது கைகட்டி நின்று என் கவிதையின் முன் வேடிக்கை பார்க்கின்ற பார்வையாளனாக இருந்துகொண்டிருக்கின்றேன். சுயானுபவப் பெருவெளியில் ஒளியும் இருளுமே என் கவிதையை வழிநடத்தப்போதுமானவை என்பதை நான் வெகுகாலத்திற்கு முன்பாகவே கண்டுவிட்டேன். அதனால்தான் நான் அகம் சார்ந்த இந்தக் கவிதைகளின் பக்கமாக எப்போதும் திரும்பினவனாக இருக்கிறேன்.

            அபி சொல்கிறார்இந்தக் கவிதை என் கவிதை இல்லை’’ என்று சொல்லுகிறார். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் அதுதான் உண்மை. நம்முடைய ஆழத்து உணர்வுகள் முழுமையும் நமக்குச் சொந்தம்தானா என்று யோசனை செய்துபாருங்கள். ஒரு வழக்கான உதாரணம் சொல்வார்கள். மனிதன் கற்காலத்தில் இருந்து இன்று வந்துள்ளான். அந்தக் கற்கால மனிதன் நம்முள் இருக்கிறான? எப்படி?. அவசர ஆத்திரத்திரத்திற்குக் கல்லைத் தூக்குகிறோம். அந்த இடத்தில் அந்த மனிதன் இன்னும் இருக்கிறான். இதை நான் சொல்லவில்லை. இதைச் சொன்னவர் யூங் என்ற உளவியல் மேதை. அவர் சொல்லுகிறார் ‘‘ஒருவருக்குள் அவனது முன்னோர்; அவனது முன்னோன்; அவனது முன்னோன் என லட்சக்கணக்கான முன்னோர்கள் இருப்பார்கள்’’ என்று. அவ்வளவு பேரும் இவனது தலைக்குள்தான் இருப்பார்கள். அப்படி என் முன்னோன்களில் எந்த முன்னோனுக்கு எந்தவிதமான கவித்துவம்; எந்த நேரத்தில் இருந்தது என்று தெரியாது. எந்த முன்னோன் என் கவிதையை வழிநடத்தினான் என்பது தெரியாது. என் கை உருவாக்கிற்று. என் மனம் சொன்னது. என் நாக்குள்ளே நான் உச்சரித்துக்கொண்டேன். நான் பயின்ற தமிழ்ச் சொற்கள். ஆனால் அந்தக் கவிதையினுடைய உரிமையாளன் நான் இல்லை. எனக்கு முன்னால் இருந்த யாரோ ஒருவர். இதைத்தான்    யூங்தொகை நினைவிலிஎன்று சொன்னார்.

            நண்பர் ஒருவர் என்னிடம் உங்கள் பிறந்தநாள் எது? என்று கேட்கும்போது நான் சொன்னேன், என்னுடைய பிறந்தநாள் எது? என்று எனக்குத் தெரியாது. முதல் மனிதன் தோன்றியபோதே நானும் தோன்றிவிட்டேன். அது உண்மையில்லை என்று எவரும் மறுக்க முடியுமா? முதல் மனிதனிடமிருந்துதானே நாம் வந்திருக்கிறோம். தோன்றிய எதுவும் அழிவதில்லை. அன்றைக்கு மனித சமூகம் முழுவதும் தோன்றிவிட்டது என்று சொன்னால் அது என்னையும் சேர்த்துத்தான். ஆனால் தாய் வயிற்றில் பிறப்பதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் காத்திருந்தேன். நான் இடையில் இருந்த ஆண்டுகள் நான் இல்லாத ஆண்டுகள் இல்லை. நான் காத்திருந்த ஆண்டுகள். இதிலிருந்து நான் இன்னொற்றையும் யூகிக்கின்றேன். என்னுடைய கவிதையும் இதேபோன்று எப்போதோ? எங்கோ? பிறந்து; எனது வருகைக்காகக் காத்திருந்து; என்னை அடையாளம் கண்டு; என்னை வந்து சேர்ந்துகொண்டது என்று நான் நினைக்கின்றேன். இதை நான் எழுதியும் இருக்கிறேன். இது ஒரு திரைப்பாடப் பாடலில் வந்துள்ளது. ‘‘இன்று வந்த என்கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’’ என்று. இது ஆழம் தெரிந்து சொன்ன வார்த்தையா என்று எனக்குத் தெரியாது. இதுபோன்று சிலருக்கு அற்புத வரிகள் எங்கிருந்து சட்டென்று வந்துவிடும். நான் லா.சா.ராவிடம் ‘‘நிமிசத்தின் சிமிலிலிருந்து மையை எடுத்துப்போட்டுகொண்டு வருசங்களைப் பாரத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று எப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டேன்.அதுஅபி சார் ‘‘விருட்டுனு வாயில வந்துட்டது’’ என்றார். விருட்டுனு வந்ததால் அது கவிதை ஆகாது என்று சொல்லிவிடமுடியாது. ஆகவே பலபேரின் சேகரத்தினால் வந்த என்னுடைய கவிதை முழுமையாக என் கவிதை என்ற சொல்லிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் பத்திரிக்கையில் என்னுடைய கவிதைக்குப் பக்கத்தில் புகைப்படத்தைப் போட கேட்டபோது தரமறுத்துவிட்டேன். அதன் காரணம் கேட்டபோது ‘‘அதை எழுதியவனது போட்டோ என்னிடம் இல்லை. இந்தக் கவிதையின் பக்கத்தில் இதை எழுதாத என்னுடைய போட்டோ போடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை’’ என்றேன்.

            எனது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில் ஒன்று எழுதியிருந்தார்கள். ‘‘அபியின் கவிதை உணர்வுகளின் அரூபப் பிறப்பு நிலைகளைக்கொண்டு இயங்குவது’’ என்று. ஜெயமோகன் போன்றவர்கள் என்னை அரூபக் கவிஞன் என்றும், என்னுடைய கவிதையை அரூபக் கவிதை என்றும் வகைப்படுத்தினார்கள். அரூபம் என்றால் என்ன?. உருவம் இல்லாதது எல்லாம் அரூபம் என்று சொன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் எது அதிகம்?. எல்லாமே அரூபம் தான். அதேசமயம் இவை அனைத்தும் கவிதைக்கு ஏற்றவை என்று சொல்லிவிட முடியாது. சில சமயங்களில்  அரூபங்கள் கூட உருவங்கள் பெற்றுவிடும். அன்பு என்பது தொட்டுப்பார்க்கும் பொருள் இல்லை. அது அரூபம் தான். அந்த அரூபத்திற்கு காந்தியின் படத்தைப் பார்த்தால் அன்பின் ரூபமாகத் தெரிகின்றது. இப்படி அரூபங்களுக்கு உருவம் கிடைத்துவிடுகின்றது. இன்னும் சில அரூபங்கள் உருவம் பெறுவதை நான் பார்த்திருக்கின்றேன். ஞாயிறு, திங்கள் என்று கிழமை சொல்லுகிறோம் அல்லவா இதற்கொல்லாம் வண்ணம் நான் பாரத்திருக்கிறேன். ஞாயிற்க் கிழமை சற்று கரும்பச்சை நிறமாக இருந்தது. திங்கள் கிழமை ஆரஞ்சு நிறமாக இருந்தது. செவ்வாய்க் கிழமை பச்சை நிறமாக இருந்தது. இப்படிக் கிழமைகளை நான் நிறங்களாகப் பார்க்கின்றேன். ஆனால் சில அரூபங்களுக்கு நம்மால் உருவம் தர முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் கா.நா.சுவும் சி.சு.செல்லப்பாவாவும் ஒரு கருத்தை என்னிடம் சொன்னார்கள். சங்க அக இலக்கியத்தைக் காதல் இலக்கியம் என்று சொல்லுவார்கள். அகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘‘அகம் என்பது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தங்களுக்குள் ஒன்று கூடி மகிழ்ந்து, அந்தக் கூட்டத்தினுடைய பேரின்பம் (இன்றைக்கு இதைச் சிற்றின்பம் என்கிறார்கள்) இத்தகையது என்று தங்களுக்குள் பேச முடியாதது’’ என்று விளக்கம் தந்தார். சொல்லமுடியாததை அகம் என்றார்கள். கா.நா.சுவும், சி.சு.செல்லப்பாவும் காதலுக்கு மட்டுமல்லா இல்லை. இப்பொழுது புதுக்கவிதைகளில் சொல்லமுடியாத உணர்வுகள் சொல்லப்படுகின்றன அல்லது சொல்ல முயற்சிக்கப்படுகின்றன அல்லது சொல்வதற்கு ஆசைப்படுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். சொல்லிவிட்டு இந்தக் கவிதைகளையும் அகக் கவிதைகளாகச் சேர்க்கலாம். அகக் கவிதைக்கும் அரூபக் கவிதைக்கும் வித்தியாசம் இல்லை என்றார்கள். இப்படிச் சொன்னாலும் சங்க அகக்கவிதைகளை அரூபக் கவிதைகளாகச் சொல்லமுடியுமா?. அதில் தலைவன், தலைவி, தோழி என்றெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து அகக் கவிதையைக் கவனித்தால் தலைவியை வர்ணிக்கும் போதும் ஒரே மாதிரியாகவும் தலைவனை வர்ணிக்கும்போது ஒரே மாதிரியாகவும் இருப்பதைக் காணலாம். தொல்காப்பிய இலக்கணத்தில் யார்? யார்? என்ன? என்ன? பேச வேண்டும் என்பதை வரையறுத்துள்ளார். அப்படியென்றால் அவர்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்வி எனக்குள் எழுகின்றுது. ஒரு பொது உருவம் கொடுக்கப்பெற்றிருக்கின்றது. மற்றபடி அவை அருவங்கள். அவர்களின் பேச்சுக்குரல்கள் அரூபக் குரல்களாகக் கேட்கின்றன. அதையும் இன்றைய பார்வையில் அக்கவிதைகளை நான் அரூபக் கவிதைகளாக ஏற்றுக்கொள்வேன். சொல்லில் சொல்வதற்கு இருக்கின்ற தவிப்பு இருக்கின்றதல்லவா அப்படி ஒரு தவிப்பு பாரதிக்கு வந்தது. பராசக்தியைப் பாடுவதற்கு பாரதி முயற்சிக்கிறார். ஆனால் கவிதை வரவில்லை. அப்பொழுது தன் மேல்தான் அவருக்கு எரிச்சல் வரவேண்டும். ஆனால் பராசக்தி மீது ஆத்திரம் வருகின்றது. ‘‘சொல்லினிற்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்’’ என்று சொல்கிறார். இதெல்லாம் அரூபக் கவிதையின் அம்சங்கள். கு..ரா ஒரு கவிதையில் ‘‘கண்கவருவது காண்பதற்குக் குறைவுதான்’’ என்பார். நம் காட்சியில் இருப்பது கண் அளவிற்குத்தான். இதிலிருந்து இருக்கின்ற எல்லாவற்றிலும் நான் எவ்வளவு எடுத்துக்கொடுப்பதற்கு  முயன்றாலும் என்னால் எடுத்துக்கொடுக்க முடித்ததோ அவ்வளவுதான் என் கவிதையில் வருகின்றது. அதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார். இதைப்போன்ற கவிதைகள் என்னுடைய சொந்த அனுபவமும் கூட. உள்ளிருந்து வெளிவரும்போது அப்படியே வெளிவந்துவிடுவது இல்லை. கிணற்றில் ஓட்டை வாளியை விட்டு தண்ணீர் இரைக்கும்போது முழுவதும் வராமல் பாதி கீழே போய்விடுகின்றது அல்லவா. அதைப்போல உணர்வு நுட்பங்களை வெளியே மொழியின் மூலமாக எடுக்கும்போது, மொழி ஓட்டை மொழி என்பதால் பெரும்பகுதி உள்ளே போய்விடுகின்றது. கவிதையைக் காகிதத்தில் பார்க்கின்ற கவிஞன் ஏமாந்துபோகின்றான். கவிதையைப் படிக்கின்ற வாசகன் அற்புதமான கவிதை என்கிறான். மொளனத் நாவுகள் கவிதைத் தொகுப்பில் ‘‘அவனது புண்களை வண்டுகள் பூக்களென்று மொய்க்கின்றன’’ என்று கவிதை எழுதியுள்ளேன். அவனைப் பொறுத்து அது புண். ஆனால் வண்டுகளுக்கு அது பூ.



            கவிதை எப்படிப் பிறக்கின்றது என்று பலரும் கேட்பார்கள். நான் எனது மாணவர்களுக்கு ஒரு நாள்சும்மாஎன்று தலைப்பு கொடுத்தேன். பலரும் பலவாறு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு மாணவன் எழுதியிருந்தான் சும்மா என்று தலைப்பிட்டு ‘‘இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள்’’ என்று. எவ்வளவு கவித்துவம் பாருங்கள். அந்தக் கவித்துவத்தைத்தான் நாம் தூண்ட வேண்டும். எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு கவிஞரின் கவிதையைச் சொல்லாம். ஒரு பறவை பறந்துபோய்க்கொண்டிருக்கின்றது. கீழே இருப்பவன் அந்தப் பறவையைப் பார்த்து எப்படி பறப்பது என்று சொல்லிவிட்டுப்போ என்கிறான். உடனே பறவை சொன்னது கீழே இருக்கும் போது அதைச் சொல்லமுடியாது. என்னுடன் பறந்துவா சொல்கிறேன் என்றது. பறந்து பாதி தூரம் சென்ற பின்பு இப்பொழுது சொல் என்றான். இப்படித்தான் என்றது. அட ஆமா என்றான் கீழே கிடந்தான். இது படைப்பது எப்படி என்பதற்கு இது ஒரு சின்ன விளக்கம். ‘‘புகைமூட்டத்தைப் புணர்ந்து கருத்தரி’’ என்றார் சுந்தர ராமசாமி. ஒரு ஜென் குருவிடம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல என்ன வழி என்று சீடன் கேட்டான். அந்த வழியை அந்த இடத்திற்குப் போனால் தெரிந்துகொள்வாய் என்றார். இதுவெல்லாம் நீ செய்யவேண்டியதைச் சொல்கின்றது. படைப்பது எப்படி என்று யாரிடமும் கேட்கக்கூடாது. மனது மிகவும் புழுங்கி கனத்துக்கொண்டிருக்கும். கவிதையின் பிரசவநிலை அதுதான். லா.சா.ரா என்னிடம் ஒரு முறை சொன்னார். அவர் ஒரு நாள் அலுவலகம் விட்டு வெளியே வந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்டார் தியேட்டரின் வெளியில் உள்ள போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் மனதிற்குள் ‘‘அடே’’ என்ற ஒரு ஆங்காரக்குரல் கேட்டிருக்கின்றரு. அது அவர் அனுபவித்தது. அதை அவர் சொல்லும்போது அவரது உடல் புல்லரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் தன்வசத்தில் இல்லை. அப்படியே வீடு திரும்பியவர் தான். சில நாட்களில்அடேஎன்று ஆரம்பித்தே புத்திர என்ற நாவலை எழுதினார். அது சபிக்கின்ற ஒரு விதவையின் குரல். ஒரு கூவலில் ஒரு நாவல் பிறந்திருக்கின்றது. இதைப்போல்தான் படைப்பு எப்படிப் பிறக்கின்றது என்று சொல்லமுடியாது. எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம்.

நன்றி.

கவிஞர் அபி அபியின் கவிதைக்கு விளக்கம் கூறுதல்

            இரண்டு கவிதைகள் அனைவருக்கும் படி எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று ‘‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’’ மற்றொன்று ‘‘இப்பொழுதுதான் நான்’’ என்ற கவிதைகள். ஒரு கவிஞனுக்க எழும் மிகப்பெரிய சிக்கல் எதுவென்றால், தனது கவிதையைத் தானே விளக்கிச் சொல்லுவதுதான். சமையல் செய்தவர்களிடம் ஏன் இப்படி கசப்பாக இருக்கின்றது என்று கேட்டாள் சலித்துக்கொள்வார்கள். அதுபோல்தான் இது. கடைசியில் சொல்லவேண்டியதை முதலில் சொல்லிவிடுகிறேன். கவிதைக்குப் பொருள் கிடையாது என்பதுதான். வாழ்க்கையின் பொருள் என்ன என்று சொல்லும்போது ஏதேதோ சொல்லிவிட்டுத் தோற்றுப்போகிறார்கள். யாரும் முழுமையான பொருள் சொன்னது இல்லை. கவிதைக்குப் பொருள் சொல்ல நேருகின்ற சந்தர்ப்பத்தில் அந்தக் கவிஞன் அந்தக் கவிதையைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டான். கவிதையை அவன் பிறப்பித்தபோதே அதைவிட்டு அப்பாற்பட்டவனாகிவிடுகிறான். உள்ளிருக்கும் கவிதை வெளிவருகின்றபோது அது என் கவிதை இல்லை. தமிழின் கவிதை. மொழியின் கவிதை. ஒரு கவிதை எப்படிப் பிறப்பெடுக்கின்றது என்றால், தயிர் கடையும் போது எப்படி வெண்ணெய் திரண்டு வருமோ அதுபோல கவிஞனின் உள்ளத்தில் கவிதை திரண்டுவரும். அப்படி வரும் அதை உருட்டி மொழியின்வழியே பிறப்பிக்கின்றான். அப்படி கடைவதும் திரள்வதும் என்பது இன்பமான வேதனை. நான் முன்னாள் ஒரு கவிதை சொல்லியிருந்தேன்;

‘‘பழத்தின் அழகைப் பாராட்டுகிறார்

உள்ளிருந்து குடையும்

வண்டின் குடைச்சலை யார் அறிவார்’’

என்று. அந்தக் குடைச்சல் தான் கவிஞனின் அனுபவம். அப்படிப் பிறக்கும் கவிதை முழுமையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவன். ஆனால் அது முழுமையடைவதில்லை. ஆனால் உங்களுக்க அது முழுமையானதாக இருக்கும். அப்படி வரும் கவிதை உங்களுக்குள் போகின்றது. என்னிடமிருந்து மொழிக்கு; மொழியிடம் இருந்து உங்களுக்குப் போகின்றது. இது மூன்றாம் நிலை. உங்களுக்குள்  போகும்போது உங்களுடைய பக்குவத்திற்கு ஏற்றபடி; உங்களுடைய வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்றபடி; நீங்கள் சிந்தித்துப்பார்த்துப் பழகி இருக்கின்ற முறைப்படி; அந்தக் கவிதை உங்கள் கவிதையாக மாறிவிடுகின்றது. என்னுடைய கவிதை மொழிவழியாக உங்கள் கவிதையாக மாறும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவிதையாக மாறுகின்றது. அதுவும் நேற்று படிக்கும்போது ஒரு கவிதை. இன்ற படிக்கும்போது ஒரு கவிதை. நான் என் கவிதைக்க விளக்கம் கூறப்போய் மூன்றாவதாகப் பிறப்பெடுத்திருக்கின்ற உங்கள் கவிதையை ஞாபகப்படுத்த முடியாமல் போய்விடக்கூடாது. என்னுடைய கவிதைக்குப் பொழிப்புரை இல்லை. பொழிப்புரை சொல்லமுடியாது. இப்பொழுது நேரடியாக கவிதைக்குச் செல்லலாம். ‘‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’’. அரூவங்களின் மீது நேசம் கொண்ட படைப்பாளி நான். வினை என்றொரு கவிதை இருக்கின்றது. அது உங்களுக்குத் தரப்படவில்லை. வாழ்க்கை என்பது என்ன?. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விடை உண்டு. வாழ்க்கை என்பது கேள்விகளின் சங்கமம். எல்லாக் கேள்விகளும் ஒன்றுகூடியிருக்கின்ற இடம் எதுவென்றால் அது வாழ்க்கைதான். இவ்வாறு பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். இந்த வாழ்க்கையை நான் எளிமையான முறையில் தேடிப்பார்க்க விரும்பினேன். வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள கேள்வி கேட்கக்கூடாது. புத்தகங்களைத் தேடித் திரியக்கூடாது. தத்துவங்களைத் தேடித் திரியக் கூடாது. நான் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள வாழ்க்கையையே பார்த்தேன். நான் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்றால் நான் வாழ்க்கைக்குள்ளே இருக்க முடியாது அல்லவா. அதனால் நான் வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் அல்லது வாழ்க்கையை என்னிடமிருந்து கடத்திவிட்டேன். நான் இல்லாமல் இப்பொழுது என் வாழ்க்கை. இந்த அடிப்படைப் படிமத்தை நம்பினாலன்றி அதற்கு அடுத்து நாம் போகமுடியாது. வாழ்க்கை தனியாக இருக்கின்றது. இப்போது தனியாக இருக்கின்ற வாழ்க்கையைப் பற்றி அந்தக் கவிதை தருகின்ற படிமங்களைப் பார்க்கவேண்டும். இதை நீங்கள் நம்ப வேண்டும். அப்பொழுது நான் வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டேன். இவ்வளவு பெரிய வாழ்க்கையா? நமக்கு. வாழ்க்கை என்பது இவ்வளவு சுதந்திரமானதா?. இவ்வளவு சிறப்பானதா. இவ்வளவு அற்புதமானதா என்று எண்ணி அந்த வாழ்க்கையின் மீது நேசம் கொண்டேன். வாழ்க்கை என்பது எவ்வளவு சுதந்திரத் தன்மையானது, அதனுள்ளே இருந்து நாம் அதைக் கெடுத்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதைத்தான் உணர்ந்தேன். அவ்வாறு நான் உணர்ந்ததைத்தான் படிமங்களாகத் தருகின்றேன். அப்படித்தரும் படிமங்களைத் தனித்தனியாகப் படித்து அர்த்தம் பார்க்கவேண்டியது இல்லை. மொத்தப் படிமங்களையும் படித்துப் பாருங்கள். படிமங்களின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டு போங்கள். அது உங்களை எங்கே சேர்க்கின்றது என்று பாருங்கள். படிமங்கள் அழைத்துக்கொண்டு போகின்றபோது உங்களுக்குள்ளே காட்சிகள் உருவாகும். இதில் வரும் படிமங்களைக் காட்சிகளாக மனக்கண்ணில் பாருங்கள். அப்பொழுதுதான் தனியே இருக்கின்ற வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கின்றது என்பது படிமங்களாகத் தெரியும். இப்பொழுது நாம் கவிதைக்குப் போகலாம்.

நான் இல்லாமலே

என் வாழ்க்கை

எதேச்சையில்

அருத்திரண்டது

            கட்டியிருக்கின்ற மாட்டை அவிழ்த்துவிட்டுவதும் அல்லது மூக்கணாங்கயிற்றை அவிழ்த்துவிடுவதும் என்பதை எதேச்சை என்று சொல்லுவோம். அல்லது கட்டி வைக்கப்பட்ட ஒன்றை விடுவிப்பது. முதல்முறையாக வாழ்க்கை நான் பிறந்தது முதல் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பது வரை என்னுடைய கட்டுக்குள் இருந்தது. இப்பொழுது முதல்முறையாக என்னுடைய வாழ்க்கை என்னிடமிருந்து விடுதலைபெற்று வெளியே வந்திருக்கின்றது. வந்திருக்கின்ற வாழ்க்கை என்னவாகின்றது? எதேச்சையாகின்றது. அடுத்து உள்ள சொல் நான்  உருவாக்கிய சொல். அருத்திரண்டது. உருவம் தான் திரளும். ஆனால் வாழ்க்கை என்பது அருவம். அருவம் திரள்கின்றது. இதற்குப் பொழிப்புரை சொல்லமுடியாது. அதை நீங்கள் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அடுத்து,

வடிவ விளிம்புகளைக் கற்பிக்க

நான் இல்லாததால்

நீல வியாபகம் கொண்டது

வாழ்க்கைக்கு எந்த விதமான வடிவம் கொடுப்பது?. நமது விருப்ப வெருப்புகளையெல்லாம் அதற்குக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது அந்த வடிவம் கொடுப்பதற்கு நாம் வாழ்க்கையோடு இல்லை. தனித்திருக்கிறோம். அதை உணர்ந்த பிறகு அந்த வாழ்க்கைக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடுகின்றுது. இப்பொழுது அந்த வாழ்க்கை நீல வியாபகம் கொண்டது. நீல வியாபகம் என்பது பிரபஞ்ச அளவிற்குப் பரந்து போவது. பிரபஞ்ச அளவென்பது அளவின்மையே. இன்மைகளின் மூர்க்கமான தன்மையே பிரபஞ்சம். ஆகவே வாழ்க்கை நீல வியாபகம் கொண்டது. அடுத்தது,

எதைத்துறந்தோம் என்று

அறிய வேண்டாத

நிம்மதியில் திளைத்தது

 

உணர்வுகளின்

பொது ரீங்காரம் மட்டும்

தொடர

நிழல் வீழ்த்தாமல் நடமாடியது

ஒரு துறவி ஒன்றைத் துறக்கிறான். காட்டிற்குச் செல்கிறான். எதையெல்லாம் விட்டுவந்தோம் என்று கணக்குப்பார்த்தால் அவன் துறவி இல்லை. நாம் எதை எல்லாம் விட்டுவந்தோம் என்ற எண்ணம் கூட இந்த வாழ்க்கைக்கு இல்லாமல் போயிற்று. அவ்வளவு திளைப்பான இந்த வாழ்க்கை. வாழ்க்கைக்கென்று ஒரு உணர்வுகள் உண்டு. அந்தப் பொது உணர்வுகளின் ரீங்காரம் அந்த வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டே வருகின்றது. அந்த வாழ்க்கை நீழல் இல்லாமல் நடமாடுகின்றது. உருவம் இருந்தால்தானே நிழல் இருக்கும். வாழ்க்கை தன்னுடைய எச்சம் என்றும் அடையாளம் என்றும் ஒன்றையும் காட்டமுடியாது. நம்மோடு இருக்கும்வரை அடையாளங்கள் இருந்தன. ஆனால் இப்பொழுது அது இல்லை. எனவேதான் அது நிழல் வீழ்த்தாமல் விருப்பம்போல் நடமாடியது. அது நடப்பது மட்டுமல்ல பறக்கவும் செய்கின்றது.

            கூரைகளுக்கு மேலே

            தன்மைகளின் எதிர்ப்பை

            அலட்சியம் செய்து

            அசைவு தெரியாமல்

            பறந்து திரிந்தது

கூரைகளுக்கு மேலே பறக்கும்போது இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாப் பொருளும் தத்தம் தன்மைகளோடு இருக்கின்றன. வாழ்க்கை அந்தத் தன்மைகளைத் துறந்துவிட்டது. அப்படி அந்த வாழ்க்கை துறந்த தன்மைகளை அலட்சியம் செய்துவிட்டு அசைவு தெரியாமல் பறந்து திரிகின்றது. கவிதையில் அடுத்து உள்ளது எல்லாம் படிமம்.

            பூமியைத் துளைத்து

            மறுபுறம் வெளிவந்தது

எதையும் துளைக்கமுடியும். எதன் வழியாகவும் போகமுடியும். அது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கின்றது.

            பிம்பங்களின் துரத்தலுக்கு

            அகப்படாமல் நுட்பம் எதுவுமற்ற

            சூனியத்தை அளைந்தது

எல்லாவற்றிகும் பிம்பங்கள் இருக்கின்றன. நான் என் வாழ்க்கையை அவிழ்த்துவிட்டுவிட்டேன். ஆனால் என்னுடைய பிம்பங்கள் மறுக்கின்றன. இருக்கவேண்டும் என்று அந்தப் பிம்பங்கள் துறத்துகின்றன. அந்தப் பிம்பங்களின் துரத்தலுக்கு அகப்படாமல் சூனியத்தை அளைந்துகொண்டிருக்கின்றது.

            மரணப் பாறையிலிருந்து

            குதித்து விளையாடியது

            காலத்தின் சர்வாதிகாரம்

            புகைந்து அடங்குவதை

            வேடிக்கை பார்த்தது

           

காலம் ஒரு சர்வாதிகாரம் இல்லையா. காலையின் ஏன் அலாரம் அடிக்கின்றது. இந்த நேரத்திற்குள் இதைச் செய்யவேண்டும் என்பதெல்லாம் காலத்தின் சர்வாதிகாரம் இல்லையா? இது வாழ்க்கையில் இருக்கின்றது. ஆனால் இப்பொழுது இந்த வாழ்க்கையில் காலத்தின் சர்வாதிகாரம் என்னிடம் இல்லை. அது என்னைவிட்டுப் பிறிந்துபோய்விட்டது. அது என்னோடு இருந்தால்தான் அதன் சர்வாதிகாரத்திற்கு அடங்கவேண்டியிருக்கின்றது. காலத்தின் சர்வாதிகாரம் தூரத்தில் மெல்லப் புகைந்து அடங்குகிறது. அந்த அடங்கலை மிகவும் சந்தோசமாக வேடிக்கை பாரத்துக்கொண்டிருக்கின்றது. தத்துவம் என்பது ஒரு சுமை. நான் எந்தத் தத்துவத்தின் ஆதரவாளனும் இல்லை. எதிர்ப்பாளனும் இல்லை. நான் அறிந்தும் அறியாமலும் எனது தத்துவத்தின் சாயலை என் கவிதையில் படியவிடவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் தத்துவங்களில் இருந்து விலகி இருக்கின்றேன். அபி என்ற கவிஞனின் வாழ்க்கை இருக்கிறதே அது தத்துவத்திலிருந்து விடுபட்டது. ஒரு மனிதன் தன்னை சுதந்திரனாக உணர்ந்து பார்ப்பதற்கு இந்தக் கவிதையில் வருவதுபோன்று தனியாக நின்று பார்க்க வேண்டும்.

            தத்துவ சுமை கரைந்து

            தொலைதூரத்து வாசனையாய்

            மிஞ்சிற்று

வாழ்க்கைக்கு நாம் சில அர்த்தங்களை உண்டாக்குகிறோம். சில குறியீடுகளை உண்டாக்குகின்றோம். இப்படி வாழனும், இவரைப் போல் இருக்கனும், இதைச் செய்யவேண்டும் இப்படி வாழனும் என்று நாம் சில குறியீடுகளை நிர்ணயம் செய்கிறோம். நாம் பிறரைப் பார்க்கிறோம். நம்மைப் பிறர் பார்க்கிறார்கள். நாம் நம்மைப் பார்க்கிறோமா? நான் கண்ணாடியில் பார்ப்பதைச் சொல்லவில்லை. அதிகம் பார்ப்பதில்லை. நம்மை யோசித்துப் பார்ப்பதில்லை. நமக்குள் நுழைந்து பார்ப்பதில்லை. பிறரைப் பார்ப்பதுதான் நமக்கு வழக்கமாக இருக்கின்றது. இந்தக் குறியீடுகளின் குறுக்கீடுகள் இல்லாமல் போனதால் வாழ்க்கை தன்னைத் தனக்குக் காட்டிக்கொண்டிருப்பதை கைவிட்டுவிட்டது. நீங்கள் யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அந்தக் கட்டாயம் இப்பொழுது இல்லை. ஏனென்றால் வாழ்க்கையை நாம் தள்ளிவைத்திருக்கிறோம்.

            எனது குறியீடுகளின்

            குறுக்கீடு

            இல்லாது போகவே

            தன்னைத் தனக்குக்

            காட்டிக் கொண்டிருப்பதையும்

            கைவிட்டது.

இந்த மொத்தக் கவிதையின் அனைத்துப் படிமங்களின் வழியாகவும் பயணம்செய்து பாருங்கள். மொத்தத்தில் தெரிவது சுதந்திரம். இந்தச் சுதந்திரச் சிந்தனை நிகழ்ச்சியில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது நம்முடைய வாழ்க்கையைப் போல் சுதந்திரமானது வேறொன்றுமேயில்லை. இந்த அளவிற்குக் கடவுகள் நமக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தச் சுதந்திரத்தையெல்லாம் பறிப்பது யார்? நாமதான். இந்தக் கவிதையில் சொன்னது எல்லாம் வாழ்க்கையின் சுதந்திரம். அதனுடைய மகிழ்ச்சி. அதன் எல்லை கடந்த பேரானந்தம். இப்படி இந்தக் கவிதையைப் பார்க்கலாம். இதற்கு மேலாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது உங்கள் பார்வை. நான் இப்பொழுது பொருள் கூடச் சொல்லவில்லை. சின்னதாக வழிகாட்டியிருக்கின்றேன்.

            கவிதை புரியவில்லை என்று வருத்தப்படாதீர்கள். யாரும் வாழ்க்கை புரியவில்லை என்று வருத்தப்படுவதில்லை. தன்னுடைய மகனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்று வருத்தப்படுவதில்லை. கவிதை புரியவில்லை என்றால் என்ன கெட்டுப்போய்விட்டது. புரியும்  உங்களுக்கு. புரியாதிருப்பது ஒரு கவிதையின் தன்மை என்றால் அந்தத் தன்மை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். அதுவே போதுமானது. இன்று புரியவில்லை என்றால் நாளை புரியும். நாளை புரியவில்லை என்றால் இன்னொருநாள். உங்களுக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட அனுபவம் வரும்போது, அடடா, அந்த வரியை அங்கு பார்த்தோமே அது இன்றைக்க நமக்குப் பொருத்தமாக இருக்கின்றதே என்று தெரியும். எத்தனையோ அகதிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். இதனை ஒரு சங்கப் பாடல் நமக்குக் காட்டுகின்றது. ‘‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’’ என்ற பாரிமகளிரின் பாடலின் சோகம் இன்றும் அதன் அநுபவத்தை காட்டுகின்றதல்லவா? இதை அனைத்து அகதிகளிடுத்தும் பொருத்திப்பாருங்கள். இந்தக் கவிதை என்றைக்கும் அழியமா? சங்க இலக்கிய காலத்தோடு போகுமா? இன்றளவும் அதன் அவசியம் இருக்கின்றது. மாதவி சொல்லுவாலள் ‘‘நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேமாள்’’  என்று. இதைக் கூறும் குடும்பம் இன்றும் உலகம் முழுவதும் இருக்கத்தானே செய்கின்றது. நல்ல கவிஞன் படைத்த வரிகளுக்குச் சாவு கிடையாது. அது தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கும். அதுபோலத் தான் ‘‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’’ என்ற இந்தக் கவிதையைப் புரிந்துகொள்வதற்குச் சிலகாலம் காத்திருங்கள். குழந்தைப் பருவத்தைத் தக்கவைத்துக் கொண்டவர்கள் கவிதையை நன்கு வாசிப்பார்கள், எழுதுவும் செய்வார்கள். அந்தக் குழந்தைப் பருவத்தை அழியவிட்டுவிடாதீர்கள்.

உரையாடல்

கேள்வி : மௌனத்தின் நாவுகள், அந்தரநடை, என்ற ஒன்று, மாலை இந்தக் கவிதைகள் எல்லாம் பல வடிவங்களின் வெளிவந்திருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் என்ற உங்கள் கூற்றுப்படி இதை நாங்கள் எப்படி உணர்வது?

கவிஞர் அபி : உடம்பிற்கு, மனதிற்கு, அறிவிற்கு வளர்ச்சி இருப்பது போல கவித்துவமும் காலந்தோறும் வளர்ந்துகொண்டிருப்பது இயல்பு. அப்படியே இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. தொடக்கத்திலிருந்து ஒரே மாதரியான படைப்புகள் படைக்கும் எவ்வளவு பெரிய படைப்பாளியாக இருந்தாலும் இந்தச் சமூகம் ஒதுக்கிவிடும். ஆனால் அடுத்தடுத்த தொகுப்புகள் வரும்போது அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் செல்லவேண்டி உள்ளது. இது நான் விரும்பிச் செய்த காரியம் இல்லை. கவிதை என்னை விரும்பி என்னை மாற்றித் தன்னை மாற்றிக்கொண்டிருக்கின்றது. முதலில் என்னை மாற்றியது. சிலப்பதிகாரம் தான் இளங்கோவடிகளை உண்டாக்கிற்று என்றால் மறுக்கமுடியமா? எப்பொழுது அவன் எழுதத் தொடங்கினானோ அப்போதிலிருந்து அது அவனை எழுதிக்கொண்டிருக்கின்றது. என் கவிதை என்னை எழுதிக்கொண்டிருக்கின்றது. ‘‘மௌனத்தின் நாவுகள்’’ எழுதும்போது ஒரு மனநிலையில் இருந்தேன். ‘‘அந்தரநடை’’ வரும்போது அதிகம் உள்ளே போகத் தொடங்கினேன். என்னுடைய பிம்பங்களோடு சேர்ந்துபார்த்தேன். உள்ளே போகப்போக பெரிய முயற்சிகளோடு ‘‘அந்தரநடை’’ கவிதைகளைப் படைத்தேன். அதற்குப் பின் என்ற ஒன்று வருகின்றபோது நான் முழுமையாகச் சுதந்திரம் அடைந்துவிட்டேன். என்னுடைய பொறுப்புகள் எல்லாவற்றையும் என்னுடைய கவிதைகளிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்படியாவது வாருங்கள் என்று. என்னுடைய கவிதைகள் என்னைவிடப் பொறுப்புணர்ச்சி மிக்கவை. அதைத் தங்களைத் தாங்களே நல்லவிதமாக உருவாக்கிக்கொண்டன. அடுத்தது ‘‘மாலை’’ வரும்போது என்னுள் இருந்த குழந்தை என்னை நச்சரித்துக்கொண்டிருந்தான். என்ன? என்னைக் கைவிட்டுவிட்டாய் என்று. விடவில்லை. நான் உன்னுடைய வயதிற்கு வருகின்றேன் என்ற அந்தச் சூழ்நிலையை, அந்தக் காலத்தை எல்லாம் கொண்டுவருகின்றேன். உன்னுடைய மனதின் நடமாட்டங்களை நான் அளந்துவைத்திருக்கிறேன். அவ்வளவும் கவிதைகளில் வெளிப்படுத்துகிறேன் என்று வாக்குக் கொடுத்தேன். அப்படிப் பிறந்ததுதான் ‘‘மாலை’’. ஆக படிப்படியாகக் கவிதை தன்னை வளர்த்துக்கொண்டது. அதன் மூலமாக நான் வளர்ந்தேன்.

கேள்வி : உங்களுடைய கவிதைகளை நிகழ்வுகளாகப் பார்க்கிறீர்களா? அல்லது கற்பனையாகப் பார்க்கிறீர்களா?

கவிஞர் அபி : நிகழ்வுகள், கற்பனைகள் இரண்டும் வேறுவேறு. நிகழ்வுகள் என்பது யதார்த்தம். கற்பனை என்பது எதார்த்தைத் தாண்டியது. இப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படி அல்ல. நிகழ்வுகளிலே கற்பனை இருக்கின்றது. நிகழ்வுகளின் மூலமாகக் கற்பனை வரும். நிகழ்வுகளின் ஆழத்திலும் கற்பனைகள் இருக்கின்றது. கற்பனை இருக்கிறதே ‘‘கற்பித்துக்கொள்வது கற்பனை’’ என்று எல்லோரும் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி அல்ல. கவிதைக்குள்ளே கற்பனை இருக்கிறதென்றால் கவிதை உண்மையைச் சொல்ல விரும்புகின்றது. உண்மையைச் சொல்வதற்கு ஒரு கருவி வேண்டுமே. அந்தக் கருவிதான் கவிதை. கவிதையை அழகு என்று சொல்வார்கள். ஆனால் கவிதையில் உண்மை இருந்தால் பேரழகு தானாக வந்துவிடும். நிரையக் கவிஞர்கள் கவிதையை அழகுபடுத்த முயல்கிறார்கள். கவிதையை அழகுபடுத்த வேண்டாம். ஒரு உண்மையைச் சொல்லுங்கள் அது கவிதையாக நிற்கும். அற்றைத் திங்கள் போல. கற்பனை என்பதை கவிதையைப் பொறுத்தவரை கற்பனையே அல்ல. உண்மையின் உண்மையான உண்மை. உண்மையைச் சொல்வதற்கு சரியான கருவி கற்பனைதான். ஒரு கவிதையைக் கற்பனையின் வழிப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். அந்தச் சொல் கற்பனைதான். ஆனால் கற்பனை உண்மையினும் மேலானது. அந்த வகையில் கற்பனையைச் சொல்லுகின்றேன். உண்மையைச் சொல்ல நேருகின்றபோது என்னையறியாமல் கூடவே நிகழ்வுகள் வருகின்றன. என்னுடைய கவிதைகள் நிழ்ச்சிகள், சம்பவங்கள் கதைகளில் வருவதுபோன்று அதிகம் இடம்கிடையாது. பேச்சுகள் உண்டு. மேலும் கீழுமான நிகழ்ச்சிகள், வாழ்க்கையின் இயல்புகள் இல்லை. அதெல்லாம் இல்லை என்றால் அதன் ஆழமான மூல வேர்கள் இருக்கின்றன. வெளியே தெரிகின்ற வாழ்வின் அம்சங்கள் இல்லை. என் கவிதை அதைத் துறந்துவிட்டிருக்கின்றது. அன்றாட வாழ்க்கையைச் சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கு அடியில் இருக்கின்ற மூலங்களைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை. வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இருளை உற்றுப்பார்த்து அந்த இருளுக்குள்ளே ஒன்று இருக்கின்றது என்று கண்டறிவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. கவிதையை ஒளியின் பிரசன்னம் இருக்கிறார்கள். என் கவிதையை இருளின் தீட்சன்யம் என்றே சொல்லியிருக்கின்றேன். பாரதி சொன்னான் ‘‘இருள் என்பது குறைந்த ஒளி’’. அந்த ஒளியிலும் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இருக்கின்றது. அந்த இருண்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொணடோம் என்றால், அதன்மூலம் வாழ்க்கையினுடைய நாம் கண்டறியாத இன்னொரு பகுதியைப் பார்க்கமுடியும். இதைச் சொல்வதற்கு ஒருவன் தேவைப்படுகிறான். அந்த ஒருவனாக நான் இருக்கின்றேன்.